மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தால் - உலக பொருளாதார வீழ்ச்சி அபாயம் அதிகரிப்பு
இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் என உலகின் மிகப்பெரிய நிதி முகாமைத்துவ நிறுவனமான ‘பிளாக்ராக்’ (BlackRock) தலைவர் லாரி ஃபிங்க் (Larry Fink) எச்சரித்துள்ளார்.
பிபிசி (BBC) நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், ஈரான் ஒரு அச்சுறுத்தலாக நீடித்து மசகு எண்ணெய் விலை உயர்விலேயே இருந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், மத்திய கிழக்கு மோதல்கள் முடிவுக்கு வராவிட்டால், அடுத்த சில ஆண்டுகளுக்கு எண்ணெய் விலை 100 முதல் 150 டொலர் வரை நீடிக்கக்கூடும் எனவும், இது ஒரு செங்குத்தான பொருளாதார வீழ்ச்சிக்கே (Steep Recession) இட்டுச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு 'குமிழி' (Bubble) இருப்பதாகத் தான் கருதவில்லை எனத் தெரிவித்த லாரி ஃபிங்க், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் அதிகளவில் தொழில்நுட்பப் பயிற்சிகளை (Technical Training) பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுமார் 14 டிரில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களைக் கையாளும் பிளாக்ராக் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை, சர்வதேச நிதிச் சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















