மறைந்த ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு
முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு மற்றும் அதைத் தொடர்ந்து அடக்க ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு, அவருக்காக மூன்று நாள் இறுதி சடங்கு நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக, ஈரானிய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதி சடங்கு நிகழ்ச்சி நிரல் விவரங்களை ஈரானிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியிட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி, ஒருவர் இறந்த சில நாட்களுக்குள் இறுதி சடங்குகள் பொதுவாக நடத்தப்படும். இருப்பினும், பிப்ரவரி 28 அன்று, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு தாக்குதலில் அயதுல்லா கமேனி அவரது இல்லத்தில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலான துக்கப்படுபவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் ஏற்பட்ட ஏற்பாடுகளில் உள்ள சவால்களைக் காரணம் காட்டி, இறுதிச் சடங்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் மார்ச் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-இன் தகவல்படி, தெஹ்ரானின் கலாச்சார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துணை மேயர் முகமது அமீன் தவாகோலி-சாதே, 'தியாகி இமாம்' அவர்களின் பிரியாவிடை, இறுதிச் சடங்கு மற்றும் நல்லடக்க விழாக்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் மூன்று நாட்கள் பொது விழாக்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் என்றும் கூறினார்.
"தெஹ்ரானில் நடைபெறும் இறுதிச் சடங்கு குறைந்தது 24 மணிநேரம் நீடிக்கும்" என்று கூறிய தவாகோலி-ஜாதே, தலைநகரில் 2 கோடி பேர் வரை கலந்துகொள்வார்கள் என அதிகாரிகள் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், தெஹ்ரானின் முசல்லா (மாபெரும் தொழுகை மண்டபம்) மற்றும் இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் இமாம் கமேனியின் கல்லறை மாடம் ஆகியவற்றுக்கு இடையே அது தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தெஹ்ரானில் நடைபெறும் இறுதி ஊர்வலம் குறைந்தது 24 மணிநேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜாதே குறிப்பிட்டார். அதன் பிறகு, வீரமரணம் அடைந்த தலைவரின் உடல், புனித நகரமான கோமிற்கும், பின்னர் இதே போன்ற சடங்குகளுக்காக மஷ்ஹத்திற்கும் கொண்டு செல்லப்படும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அயதுல்லா சையத் அலி கமேனியின் இறுதி நல்லடக்கம், வடகிழக்கு நகரமான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெஸா (அலை) அவர்களின் புனித ஆலயத்தில் நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.






















