உக்ரைனில் வணிக கப்பல் மீது தாக்குதல் - 4 இந்தியர்கள் உயிரிழப்பு
உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதில் பயணித்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
'எம்.வி. கோல்டன் லியோ' (MV Golden Leo) என்ற அந்தக் கப்பலில், ஐந்து இந்தியர்கள் உட்பட மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்த இந்தியா, வணிக கப்பல்களை குறிவைப்பதும், அப்பாவி பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் "கண்டிக்கத்தக்கது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை" என்று மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும், இத்தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த தகவலும் வழங்க்படவில்லை.
4 இந்தியர்கள் உயிரிழப்பு:
"ஜூலை 19-ஆம் தேதியன்று மாலை, ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்த 'எம்.வி. கோல்டன் லியோ' கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவத்தின் போது, ஐந்து இந்தியர்கள் உட்பட 17 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர்.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, நான்கு இந்தியர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.
"உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்த இந்தியர் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்துகிறோம்," என்றும் அது குறிப்பிட்டது.
கண்டன அறிக்கை:
"இத்தகைய தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. வணிகக் கப்பல்களைக் குறிவைப்பதும், அப்பாவிப் பணியாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதும் அல்லது கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சுதந்திரத்திற்குத் தடையை ஏற்படுத்துவதும் கண்டிக்கத்தக்கவை மற்றும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது," என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.






















