இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு
இலங்கை
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (Neighbourhood First) கொள்கையின் கீழ், இலங்கையின் நலனுக்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் துணை ஜனாதிபதி இதன்போது உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.






















