• Welcome to TamilsGuide
செய்திகள் 1

60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா புதிய வரி

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், குறைந்தது 60 நாடுகளின் தயாரிப்புகள் மீது 10% அல்லது அதற்கும் அதிகமான சுங்க வரிகளை விதிக்க அமெரிக்க பரிந்துரைத்துள்ளது.

கட்டாய உழைப்பு இறக்குமதித் தடையை அமுல்படுத்தத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலங்கை, கனடா, மெக்சிகோ, தாய்வான், ஐக்கிய இராச்சியம் மற்றும் சில பிற நாடுகள் 10% கூடுதல் வரியைச் செலுத்த நேரிடும் என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதன்கிழமை (03) அதிகாலையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பிரேசில், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகள் மீது கூடுதலாக 12.5% ​​வரி விதிக்கப்படும்.

இந்த பரிந்துரை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைக் கையாள்வதில் நமது மிக முக்கியமான வர்த்தகப் பங்காளிகள் தவறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது, அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகளவில் சமமற்ற ஒரு களத்தில் போட்டியிட நிர்பந்திக்கப்படும் ஒரு சூழலை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

கட்டாய உழைப்பு விசாரணை தொடர்பாக, கனடா, ஈக்வடார், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பங்களாதேஷ், கம்போடியா, எல் சால்வடார், குவாத்தமாலா, மலேசியா, தாய்வான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% சுங்க வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து தொடர்ச்சியான வரிவிதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய வர்த்தகப் பங்காளிகளை, இந்த அண்மைய வரிவிதிப்புகளின் தொடர் தாக்குதல் கலக்கமடையச் செய்யக்கூடும்.

சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றியம் தனது பெரும்பாலான ஏற்றுமதிகளுக்கான சுங்க வரிகளை 15% ஆகக் கட்டுப்படுத்தும் ஒரு சுங்க வரி ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவுடன் ஒப்புதல் அளித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுக்கு இடையே நடந்த தீவிர விவாதங்கள் மற்றும் இந்த ஒப்பந்தத்தைத் தடுப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதேவேளை புதிய வரிகள் உடனடியாக அமுலுக்கு வராது. அவை பொதுமக்களின் கருத்து மற்றும் ஆய்வுக்கு உட்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply