அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு - தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு
இலங்கை
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி வருவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் ,
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
பொதுவான விடயங்களில் நாங்கள் ஒன்று பட்டு செயற்படுவது தொடர்பிலும் , தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வருகின்ற திட்டங்களை எதிர்ப்பது மற்றும் தீர்வு திட்டம் தொடர்பிலும் பேச்சுக்களை நடாத்தியுள்ளோம்.
அத்துடன் மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்பது தொடர்பிலும் பேச்சுக்களை நடாத்தி இருக்கிறோம்.
இன்னும் இறுக்கமான கட்டமைப்பாக நாங்கள் தொடர்ந்து செயற்படுவது தொடர்பில் தமிழரசு கட்சி ஆராய்ந்து வருகிறது.
அது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து பேச்சுக்களை நடாத்துவோம் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை புதிய அரசியல் சாசனத்திற்கு தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சனைக்கான தீர்வை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வருகிறது.
இப்பொழுது ஒரு புதிய ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய புதுச்சபை என்ற பெயரில் இன்னொரு குழு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆகவே இவற்றை தவிர்த்து எல்லோரும் இணைந்து பயணிக்கின்ற தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினுடைய அந்த முயற்சிகளை முறியடிக்காமல் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அத்துடன் அரசாங்கம் கொண்டுவரும் பௌத்த மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தெரிவித்தார்.






















