• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உடலில் மறைத்து கொக்கெய்ன் கடத்தல் - உகண்டா பெண் கைது

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளை உடலில் மறைத்து கடத்தி வந்த உகண்டா நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உகண்டாவின் கம்பாலா நகரிலிருந்து கட்டார் வழியாக இன்று (12) காலை 9.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்த உகண்டா நாட்டுப் பெண் ஒருவர், சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

47 வயதுடைய இந்தப் பெண் குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரான பெண்ணை முழுமையான சோதனைக்கு உட்படுத்திய போது, அவர் தனது உடலில் 21 மாத்திரைகளாக மறைத்து வைத்திருந்த 274 கிராம் கொக்கெய்ன் கண்டறியப்பட்டது.

மீட்கப்பட்ட இந்தப் போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 23 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் மேலும் சில கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதன் காரணமாக, அவரது உடலுக்குள் இருக்கும் ஏனைய போதைப்பொருள் மாத்திரைகளை வெளியேற்றுவதற்காகவும், மேலதிக மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் சுங்க அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply