முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்க முச்சக்கரவண்டி சங்கங்கள் கோரிக்கை
இலங்கை
அரசாங்கத்தினால் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கரவண்டிக் கட்டணங்களை உயர்த்துவதற்கு முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் மற்றும் உலகச் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் இன்று (22) முதல் எரிபொருள் விலைகள் மீளத் திருத்தப்பட்டுள்ளன.
இந்தத் திடீர் விலை அதிகரிப்புத் தமது வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா ,
முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இந்த அதிகரிப்பு, மீற்றர்களைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் மட்டுமே முறையாக நடைமுறைப்படுத்தப்பட முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் முச்சக்கரவண்டித் தொழில் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து விளக்கமளிக்க, விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.






















