• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு - தகர்க்கப்பட்ட எண்ணெய் தாங்கிக் கப்பல்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதலில், சனிக்கிழமையன்று இரு நாடுகளும் பரஸ்பரம் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, ஈரானின் 'கார்க் தீவு' அருகே ஒன்று, ஜாஸ்க் பகுதிக்கு அருகே ஒன்று மற்றும் ஓமன் வளைகுடாவில் ஒன்று என ஈரானுடன் தொடர்புடைய 03 மசகு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக அமெரிக்கப் படைகளின் போர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் ஏவுகணை அழிப்புக் கப்பலைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஈரானின் தாக்குதலில் அமெரிக்கப் படைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

அழிக்கப்பட்ட கப்பல்கள் ஈரானிய புரட்சிகர காவல் படையின் நிதியுதவிக்காகப் பயன்படுத்தப்படும் நிழல் அமைப்பைச் சேர்ந்தவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் அரசு ஊடகமான ஐஆர்ஐபி மற்றும் ஐஆர்ஜிசி வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஓமர்ன் வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணைப் பகுதிகளில் அமெரிக்க தொடர்புடைய 3 கப்பல்கள் மற்றும் "அனுமதிக்கப்படாத பாதையில்" பயணித்த 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

கார்க் தீவு அருகே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 

Leave a Reply