கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் அனுமதி
கருணைக் கொலை சட்டமூலத்திற்குப் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் கீழ் அவை அனுமதி அளித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகால பாராளுமன்ற விவாதங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் மட்டுமே இது அனுமதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.
பிரான்ஸ் குடிமக்கள் அல்லது அங்கு சட்டப்பூர்வமாக வசிக்கும் தகுதியுடைய, உயிருக்கு ஆபத்தான இறுதிக்கட்ட நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து கடுமையான உடல் ரீதியான துன்பங்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
வெறும் மன ரீதியான துன்பங்கள் மட்டுமே இதற்கான தகுதியாகக் கருதப்படாது. கடுமையான மனநலக் கோளாறுகள் அல்லது அல்சைமர் போன்ற நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் அனுமதி கிடையாது.
நோயாளி தனது முழு சுயநினைவோடு, சுதந்திரமாக இந்த முடிவை எடுக்க வேண்டும். மேலும், ஒரு வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் நிபுணர் குழுவினால் அவரது நிலை மதிப்பீடு செய்யப்பட்ட பிறகே இதற்கான அனுமதி வழங்கப்படும்.
தகுதியான நோயாளிக்கு நச்சுப் பொருள் வழங்கப்படும். அதனை நோயாளி தானாகவோ அல்லது ஒரு மருத்துவரின் உதவியுடனோ உட்கொள்ளலாம்.
பிரான்ஸ் தேசிய சபையின் கீழ் அவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 291 வாக்குகளும், எதிராக 241 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், இது உடனடியாகச் சட்டமாகாது. பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளபடி, இந்த சட்டமூலம் இறுதி தீர்மானத்திற்காகப் பிரான்சின் மிக உயரிய அரசியலமைப்பு அமைப்பான அரசியலமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்படும்.
இந்த கவுன்சில் சட்டமூலத்தை முழுமையாக ஆராய்ந்து அனுமதி அளித்த பின்னரே இது உத்தியோகபூர்வ சட்டமாக நடைமுறைக்கு வரும்.
அதேவேளை ஐரோப்பாவில் ஏற்கனவே கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக்கியுள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் பிரான்சும் இணையும். உலகளவில் கனடா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா, அவுஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் இது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















