• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் 

இலங்கை

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியும், மத நல்லிணக்கத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலமாகிய கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

​வழமைபோல கொடிக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டு, கதிர்காம ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பள்ளிவாசல் வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் இப்புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

​இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பக்திப் பரவசத்துடன் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

​இத்திருவிழாவை முன்னிட்டு, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் காடுகள் மற்றும் கரடுமுரடான வழியூடான புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாம் குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத் திருத்தலத்தை வந்தடைந்தனர்.

கடந்த 10 ஆம் திகதி உகந்தை மற்றும் குமண தேசிய பூங்காவிலிருந்து யாழ ஓடா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டிற்காகத் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தது.

​முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய இப்பாதயாத்திரைக் குழுவினர், அடர்ந்த கானகம், மேடு, சேறு மற்றும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதைகளையும், கிரவல் மண் பாதைகளையும் கடந்து தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்துள்ளனர்.

வனமுறை வேடன் அருளிய பாரம்பரிய பூஜை முறைகளைப் பின்பற்றி, கானகத்திலும் வழிபாடுகளை முன்னெடுத்து வந்த பக்தர்கள், இன்று அதிகாலை ஆலயத்தை வந்தடைந்ததும் பக்தி பரவசத்துடன் கூட்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

​ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா (பெரஹரா) இன்று இரவு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

​தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இத்திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம் (நீர்வட்டு நிகழ்வு), எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இவ்வாண்டிற்கான ஆடி வேல் விழா மங்களகரமாக நிறைவுபெறவுள்ளது.

Leave a Reply