• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுலா நிலைகுலைய நிலநடுக்கம் - 589 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர் காயமடைந்துள்ளதோடு, மேலும் நூற்றுக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் 235 பேர் உயிரிழந்ததாகவும், 4,300 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுலாவில் தங்கியிருந்த மூன்று ஸ்பானிய பிரஜைகள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளதை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் 99 பேர் தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இது தவிர, 9 போர்த்துக்கேய பிரஜைகள், 2 பிரேசில் பிரஜைகள், 2 சீனப் பிரஜைகள் மற்றும் ஒரு இத்தாலிய பிரஜை உயிரிழந்துள்ளதை அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எவ்வாறாயினும், வெனிசுலாவிற்கு நிவாரணம் வழங்குவதற்காக பல நாடுகளின் உதவிக்குழுக்கள் தற்போது அந்நாட்டைச் சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 

Leave a Reply