கனடாவில் விற்பனையாகும் ஷாம்பு குறித்து எச்சரிக்கை
கனடா
கனடாவில் உள்ள கொஸ்ட்கோ விற்பனை நிலையங்களில் இந்த மாத ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட வகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்கள் சந்தையிலிருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருமித் தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொஸ்ட்கோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடப்பு மே மாதம் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்ட ‘ரென்பியூர் டீ ட்ரீ அண்ட் ரோஸ்மேரி ஸ்கால்ப் ரீபாலன்சிங்’ வகை ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களே இவ்வாறு திரும்பப் பெறப்படுவதாக எச்சரித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த தயாரிப்புகளில் "நுண்ணுயிரிகளின் அளவு அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்" கண்டறியப்பட்டுள்ளதாக கொஸ்ட்கோ தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு லேசான தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடந்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்திய எவருக்கும் கடுமையான பக்கவிளைவுகள் அல்லது பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தவொரு முறைப்பாடும் பதிவாகவில்லை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தயாரிப்புகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அவற்றை உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கியவர்கள், அவற்றை அருகில் உள்ள எந்தவொரு கொஸ்ட்கோ நிறுவனத்திற்கும் கொண்டு சென்று ஒப்படைத்து, அதற்கான முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






















