• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு

இலங்கை

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் காண்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இதற்கு இணையாக, பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

நாட்டில் வாசிப்பு கலாசாரம் குறைந்து வரும் இவ்வேளையில், தமிழ் மக்கள் இன்னமும் வாசிப்பதில் காட்டி வரும் ஆர்வம் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூலகம் ஒன்றைத் திறப்பது என்பது சிறைச்சாலையின் தேவையை இல்லாமல் செய்வதாகும் என்றும், இந்த பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் தமிழ் மக்களின் புத்தக வாசிப்பு கலாசாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி, மாநகர சபை ஊழியர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் நகரபிதா கே. சிவம் பாக்கியநாதன், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருடன், கந்தசாமி பிரபு, ஜி. ஸ்ரீநேசன், எஸ். இராசமாணிக்கம், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply