வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
இலங்கை
2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும்
மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான நேற்று (16) வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது.
இதேவேளை, திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசி கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில் (17) திருக்கோவில் வெட்டுகுளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சுடரேற்றி அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் நாவிதன்வெளி – கல்முனை பிரதான வீதியில் சவளக்கடை தாபாலகத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு நாவிதன்வெளி தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நேற்றையதினம் (16)நடைபெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை, பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு – கற்சிலை மடுவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சமைத்து வழங்கப்பட்டது.























