அமெரிக்கா விசா மோசடியில் சிக்கிய 10,000 மாணவர்கள்
மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களை கண்காணித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவில் 'ஸ்டூடண்ட் விசா'வில் கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு ஓ.பி.டி., எனும் பயிற்சி திட்டத்தின் கீழ் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அங்குள்ள நிறுவனங்களில் பணி அனுபவம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அனுபவத்தை வைத்தே வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், இந்த திட்டத்தை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை கூறியுள்ளது.
ஆன்லைன் மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபடும் சில நிறுவனங்கள், குறிப்பாக இந்தியாவில் இருந்து செயல்படுபவை, இந்த மாணவர்களுக்கு வேலை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதனால், இந்த மாணவர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.






















