போர் நிறுத்தத்தின் பின் முதல் முறை.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய LPG கப்பல்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததை அடுத்து, இந்தியக் கொடியுடன் கூடிய 'ஜக் விக்ரம்' என்ற எல்பிஜி கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த வழித்தடத்தை கடந்த முதல்இந்திய கப்பல் இதுவாகும்.
மும்பையைச் சேர்ந்த கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான 'ஜக் விக்ரம்', 20,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வருகிறது.
ஜலசந்தியைக் கடந்த கப்பல் ஓமான் வளைகுடா வழியாக இந்தியா வந்துகொண்டிருக்கிறது.
கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், கப்பல் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் மும்பை துறைமுகத்தை வந்தடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து பாரசீக வளைகுடாவைக் கடக்கும் ஒன்பதாவது இந்தியக் கப்பல் 'ஜக் விக்ரம்' ஆகும்.
இதற்கிடையில், மேலும் 15 இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்காக அப்பகுதியில் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.























