• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கை

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த “புகையிரத வினைத்திறனை மேம்படுத்தும் திட்டத்திற்காக”, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதிப் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 2,162 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி முதலீடு செய்யப்படவுள்ளது.

அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக, தினசரி புகையிரதச் சேவையைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான பயணிகளுக்கு உயர்ந்த தரத்திலான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக,

பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக நவீன தானியக்க பயணச்சீட்டு வழங்கல் முறைமைகளை அறிமுகப்படுத்துதல். விசேட தேவையுடையோர் மற்றும் முதியோர் தடையின்றிப் பயணிக்கும் வகையில் நவீன மின்தூக்கிகள் மற்றும் மேம்பாலக் கட்டமைப்புகளை நிர்மாணித்தல். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கட்டடத் தொகுதிகள் மற்றும் உயர்தரத்திலான சுகாதார வசதிகளை நிறுவுதல் ஆகியன உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

இத்திட்டம் பூர்த்தி செய்யப்படும்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பயணிகளை மையப்படுத்திய, வினைத்திறனான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரதான போக்குவரத்து மையமாக மாற்றமடையும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

அபிவிருத்தியடைந்த பொதுப் போக்குவரத்து இல்லாத ஒரு நாட்டை, அபிவிருத்தியடைந்த நாடாகக் கருத முடியாது. எமது கொள்கையின் நோக்கம் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாகவும் கௌரவமாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையான போக்குவரத்து கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதாகும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதி அமைச்சர்களான பிரசன்ன குணசேன மற்றும் எரங்க குணசேகர, கொழும்பு பிரதி முதல்வர் ஹேமந்த வீரசிங்க ஆகியோரும் புகையிரத பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய உள்ளிட்ட அமைச்சு மற்றும் புகையிரதத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
 

Leave a Reply