ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடித் தளர்வு - அத்தியாவசியக் கப்பல்களுக்கு அனுமதி
ஈரானிய அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய துறைமுகங்களுக்கு செல்கின்ற கப்பல்கள் அல்லது ஓமான் கடலில் உள்ள துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வளைகுடா பகுதிகளை நோக்கி ஈரான் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு இராச்சியம், இந்த போரின் காரணமாக கடுமையான விளைவுகளை சந்தித்து வருகிவதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், அமெரிக்க ஊடகங்கள் ஈரானின் நிலைப்பாட்டை தவறாக விளக்கி வருவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரானிலிருந்து தெற்கு ஈராக் பகுதிகளுக்கு செல்லும் எரிவாயு விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஈராகின் மின்சார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடை காரணமாக, ஈராக்கின் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்த தாக்குதலால் ஈரானில் உள்ள அணு நிலையம் ஒன்றின் அருகிலுள்ள பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் இன்று காலை ஒருவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கு முழுவதும் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியிலும், உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் நிலையான எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்து உறுதி செய்து வருவதாக இந்தியாவின் பெற்றோலிய அமைச்சு தெரிவித்துள்ளது.





















