கியூபாவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன் - டிரம்ப்
கரீபியன் தீவு நாடான கியூபா தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அத்தீவை கைப்பற்றும் பெருமையை நான் பெறுவேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கியூபாவை விடுவித்தாலும் சரி, அல்லது கைப்பற்றினாலும் சரி, என்னால் அந்தத் தீவைக் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு அழகான தீவு. சிறந்த வானிலை கொண்டது.
அதை வசப்படுத்திய பெருமை எனக்கு கிடைக்கும். கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் நிர்வாகம் பேசி வருகிறது என ட்ரம்ப் தெரிவித்தார்.
கரீபியன் தீவு நாடான கியூபாவுக்கும் அமெரிக்காவும் இடையே நீண்ட கால பகை காணப்படுகிறது. கியூபாவுக்கு சென்றுகொண்டிருந்த வெனிசுவெலா நாட்டு எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
இதனால் கியூபாவில் டீசல் மூலம் இயங்கும் அனல் மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் முடங்கின. அதையடுத்து, மின் தடை ஏற்பட்டு அந்நாடு முழுவதும் இருளில் மூழ்கியது. அமெரிக்க எண்ணெய் தடை விதித்தமையால், கியூபா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு நீண்ட நேர மின்வெட்டு, உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்திலேயே கியூபாவைக் கைப்பற்றும் தனது விருப்பத்தினை மீண்டும் ட்ரம்ப் வெளிப்படுத்தியிருக்கிறார்.






















