ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 100 டொலர்களைக் கடந்தது
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை, 2022 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி, ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து மூடி வைக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய், 9.2வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 100.46 டொலராக விற்பனையானது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலை 9.7வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 95.73 டொலர்களாக அதிகரித்துள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை கருத்துப்படி, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோகத் தடையை தற்போதைய போர் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாட்டைப் போக்கவும் சர்வதேச எரிசக்தி முகமை தனது மூலோபாய இருப்புக்களில் இருந்து சாதனை அளவாக 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.
இருப்பினும், ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிப்பதால் விலையேற்றம் தொடர்ந்து வருகிறது.






















