ஈரான் பாடசாலை மீதான தாக்குதல் - 46 செனட் உறுப்பினர்கள் அவசரக் கடிதம்
ஈரானின் மினாப் நகரில் உள்ள சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல் குறித்து முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்க செனட் சபையின் 46 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு (Pete Hegseth) அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி 'ஷஜாரே தய்யிபா' (Shajareh Tayyiba) சிறுமிகள் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் உட்பட சுமார் 170 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்காவினால் மட்டுமே பயன்படுத்தப்படும் 'டொமாஹாக்' (Tomahawk) ஏவுகணையே காரணம் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையிலேயே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏவுகணை பாகங்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை அமெரிக்கத் தயாரிப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், இத்தகைய ஏவுகணைகள் இஸ்ரேல் அல்லது ஈரான் வசம் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பழைய வரைபடத் தரவுகளைப் பயன்படுத்தி, அருகில் இருந்த ஈரானிய புரட்சிகர காவல்துறையின் (IRGC) கடற்படைத் தளத்தை இலக்கு வைத்த போதே இந்தப் பாடசாலை தவறுதலாகத் தாக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் செனட் உறுப்பினர்கள் பின்வரும் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அமெரிக்கப் படைகளே இத்தாக்குதலை நடத்தியதா?, பொதுமக்கள் பாதிப்பைக் குறைக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?, இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பங்கு என்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானே காரணம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் முதலில் கூறி வந்த போதிலும், தற்போது பெண்டகன் இது தொடர்பான உத்தியோகபூர்வ விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.























