ஈரானிய கப்பல் விவகாரம் - சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர
இலங்கை
நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விடயத்தைக் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய ஜனாதிபதி,
தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம்.
எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.
மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையிலே இரு ஈரான் நாட்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது.
அதிலும் நாம் நடுநிலையையே பின்பற்றியுள்ளோம்.
நாடென்ற வகையில் எந்த வகையிலும் நடுநிலையை பாதுகாக்கும் அதே சமயம் மனிதாபிமானத்திற்கு முதன்மையளிக்கிறோம்.
மனித உயிர்களை பாதுகாக்க ஒருபோதும் பின்நிற்க மாட்டோம்.
கடந்த மாதம் 26 ஆம் திகதி எமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக மார்ச் 9 முதல் 13 வரை எமது துறைமுகத்திற்கு வருகை தர அனுமதி வழங்குமாறு ஈரான் கோரியிருந்தது.
ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான விஜயமாக அது குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நாம் ஆராய்ந்ததில் எமது நாட்டு கடற்பரப்பிற்கு அருகில் அதற்கு வெளியில் ஈரான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஒத்துழைப்பு விஜயங்கள் அவ்வாறு முன்னெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பல செயற்பாடுகள் இருக்கின்றன. அது தொடர்பில் நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
இந்த நிலையில் நாம் தற்பொழுது எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள கப்பலில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி எமக்கு அறிவிக்கப்பட்டது.
அவரையும் அதிகாரி ஒருவரையும் கரைக்கு எடுத்து வர அனுமதி கோரியிருந்தனர். அதற்கமைய அவர்களை அழைத்து வந்து தேவையான சிகிச்சைகளை வழங்கினோம்.






















