இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறப்பு
மூடப்பட்ட 5 நாட்களின் பின் இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்ததையடுத்து, கடந்த சனிக்கிழமை மூடப்பட்ட பென் குரியன் விமான நிலையம் 5 நாட்களின் பின்னர் இவ்வாறு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இஸ்ரேலியர்களை ஏற்றிய முதலாவது விமானம், கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரிலிருந்து இன்று (05) காலை பென் குரியன் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
வான்பரப்பு மூடப்பட்டதன் காரணமாக இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ள சுமார் 100,000 இஸ்ரேலியர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு விமான சேவைகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலிய வான்பரப்பைக் கட்டம் கட்டமாகத் திறப்பதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.
























