• Welcome to TamilsGuide
செய்திகள் 1

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை

இலங்கை

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு, அவர்கள் விரும்பினால் இலகுவான தகுதி அடிப்படையில் கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்க இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், அரசியல் குழு உறுப்பினர் மற்றும் சர்வதேச துறைக்கான ஜ.ம.மு உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்திய அரசியல் துறை கவுன்சிலர் ராம் பாபுவும் இதில் பங்கேற்றார்.

சந்திப்பின் போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் முன்னாள் இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரிடம் ஏற்கனவே எழுத்துமூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையில் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 10 இலட்சம் பேர் தோட்டப் பகுதிகளில் வசிப்பதுடன், தற்போது சுமார் ஒரு இலட்சம் பேர் மட்டுமே தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சமூகத்தின் பெரும்பாலானோர் கல்வி, தொழில் மற்றும் வர்த்தக துறைகளில் முன்னேறி தேசிய சிறுபான்மை இனமாக உருமாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய வம்சாவளி என்ற அடையாளம் மறைக்கப்பட வேண்டியதல்ல என்றும், அந்த வரலாற்று பிணைப்பின் அடிப்படையில் இந்திய அரசுக்கு தார்மீகப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, 1964ஆம் ஆண்டின் சிறிமா–சாஸ்திரி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட வரலாற்றுப் பின்னணியை கருத்தில் கொண்டு, OCI அந்தஸ்து வழங்குவது சமூக பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என்றார். மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கான OCI மாதிரியை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், 1946 முதல் செயல்பட்டு வரும் தோட்ட தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) நிறுவனம் மறுசீரமைக்கப்பட்டு ‘இந்திய வம்சாவளி தமிழர் – சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (IOT-CDT)’ என விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்திய அரசின் நிதி ஆதரவுடன் வழங்கப்படும் அனைத்து புலமைப்பரிசில் மற்றும் கல்வி மேம்பாட்டு திட்டங்களும் இந்த அறக்கட்டளையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் தொகை மற்றும் எண்ணிக்கை அதிகரித்தல், தமிழ் வழி ஆசிரியர் பயிற்சி கல்லூரி நிறுவல், மலையக தமிழ் பெண்களுக்கான தாதியர் பயிற்சி நிலையம் அமைத்தல், கொழும்பு மற்றும் நுவரெலியாவில் சர்வதேச தரமான ஆங்கில மொழி மூலப் பள்ளிகள் தொடக்கம், நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து மலையக பல்கலைக்கழக வளாகத்தை’High-Lands University Campus)’ அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளை இந்திய அரசு சாதகமாக பரிசீலித்து தீர்வுகள் வழங்க வேண்டும் என்றும், அதற்காக இந்திய தூதரின் அறிவார்ந்த பங்களிப்பு அவசியம் என்றும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
 

Leave a Reply