மட்டக்களப்பில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
இலங்கை
மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நெல்லை உலர்த்துவதற்கான இரண்டு இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதற்கான நிதிகளை அரசாங்கம் வழங்கும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி உறுதியளித்துள்ளார்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் விசேட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று மாலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பிரதேசத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளுக்கான திட்டங்களை முன்னெடுப்பதில் அதிகாரிகள் மிகவும் மோசமாக செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன் சீரற்ற காலநிலையின்போது அறுவடைகள் நடைபெற்ற நிலையில் நெல்லை உலர்த்துவதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பாரிய நஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் விவசாயிகளின் நெல்லை விற்பனை செய்வதில் பாரிய கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.






















