ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்
இலங்கை
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான “முழு நாடுமே ஒன்றாக” செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) பி.ப 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் ஊடாக, அந்த மக்களை இதிலிருந்து விடுவித்து, அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இதன்போது, போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் அதிக பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.























