• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக சுற்றாடல் தினம் இன்று

இலங்கை

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும் .

1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளாவிய ரீதியில் எழும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் என்ற சமகால மற்றும் மிக முக்கியமான உலகளாவிய கருப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகெங்கிலும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கு அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

அதன்படி, இன்று அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், அவசர பருவநிலை நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உலகளாவிய முயற்சிகளை விரைவுபடுத்துவது வலியுறுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமே தற்காலத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் முதன்மையான சவால் என்பதை ஒட்டுமொத்த உலக மக்களும் கண்டறிந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மனித நடவடிக்கைகளின் காரணமாக, குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வளிமண்டலத்தில் மிக அதிகளவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுவதன் நேரடி விளைவு என்பதை பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டு அமைப்பினால் (UNFCCC) தெரிவிக்கப்பட்டுள்ளபடி, அடுத்த சில தசாப்தங்களில் பசுமை இல்ல வாயு உமிழ்வு கணிசமான சதவீதத்தால் குறைக்கப்படாவிட்டால், இந்த நூற்றாண்டில் உலகளாவிய வெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

எனவே, பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் விரைவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாடு, எரிசக்தி திறனை மேம்படுத்துதல், காடு வளர்ப்பு மற்றும் கழிவு மறுசுழற்சி போன்ற நடவடிக்கைகள் மூலம் எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம், வன வளங்கள் மற்றும் திடக்கழிவுகள் ஆகிய துறைகளில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் குறைக்கவும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய ஒரு எதிர்காலத்தை நோக்கி நகரவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையும் பருவநிலை மாற்றத்தின் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், அதிக செறிவுடன் பெய்யும் மழையைத் தொடர்ந்து ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள், நீண்ட வறண்ட காலநிலையால் ஏற்படும் நீர் பற்றாக்குறை போன்ற தீவிர வானிலை நிலமைகள் சாதாரணமானவையாக மாறியுள்ளன.

பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டு அமைப்பின் கொள்கைகளுக்கு இணங்க, பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும் உலகளாவிய முயற்சிக்கு தீவிரமாகப் பங்களிக்கும் வகையில், பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என்ற உள்நாட்டுக் கருப்பொருளை முன்னிறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுகிறது.

இதற்கமைய, சுற்றுச்சூழல் தினத் திட்டத்தின் தேசிய விழா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்நாட்டில் ஏராளமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருந்தபோதிலும், கடந்த காலத்தில் நிலவிய அரசியல் கலாச்சாரம் காரணமாக, அச்சட்டங்களையும் விதிகளையும் மீறி அரசியல்வாதிகளுக்குத் தேவையானவாறு சுற்றுச்சூழல் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதாக அமைச்சர் தம்மிக படபெந்தி கூறினார்.

சுற்றுச்சூழலை அழிப்பதற்கான அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்ததே கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பெற்ற மிக முக்கிய வெற்றியாகும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply