காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மயிலிட்டியில் தொடரும் போராட்டம்
இலங்கை
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக ஏழாவது வெள்ளிக்கிழமையாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இத்தகையசூழலில் தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதென காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
அதற்கமைய தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஏழாவது வெள்ளிக்கிழமையும் காணி உரிமையாளர்களால் அமைதிவழியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.























