350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை
இலங்கை
பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 350 வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்படும்.
வர்த்தமானி அறிவிப்பை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும்.
மேலும், இந்த அறிவிப்பு தற்போது பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கும் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் மருந்துகளுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேபோல், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் எதிர்காலத்தில் மேலும் பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிப்பதாகக் கூறியுள்ளது.
அதன் தலைவர், சிறப்பு மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம, 350 வகையான மருந்துகளுக்கு ஏற்கனவே கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.






















