• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இன்று விசேட கலந்துரையாடல்

இலங்கை

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 61 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுவது மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே  குறித்த பணிப்பகிஷ்கரிப்பானது முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கடந்த 2 மாதங்களாகப்  பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய கலந்துரையாடலில் தமக்கு சாதகமான தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு முன்பாக சத்தியாகிரகப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

றுகுனு பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரக போராட்டம் இன்று 13 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. எதிர்வரும் வாரத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
 

Leave a Reply