உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை
உலகளாவிய ஈட்டி எறிதல் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் இலங்கை விளையாட்டு வீரர் ருமேஷ் தரங்கவின் ஐந்து ஈட்டிகளும் சந்தேகத்திற்கு இடமான முறையில் உடைக்கப்பட்டுள்ளன.
அவர், துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் TK-730 விமானம் மூலம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து இலங்கை திரும்பிய போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
உடைக்கப்பட்டுள்ள குறித்த ஈட்டிகளில், அவர் சாதனைகள் படைக்கப் பயன்படுத்திய ஈட்டிகளும் அடங்கும் என தெரியவருகிறது.
அரசாங்கத்தின் செலவில் புதிய ஈட்டிகள்
குறிப்பாக ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரத்திற்கும், சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் 92.07 மீற்றர் தூரத்திற்கும் எறிவதற்காக அவர் பயன்படுத்திய ஈட்டிகள் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக சாம்பியனான ருமேஷ் தரங்கவிற்கு அரசாங்கத்தின் செலவில் புதிய ஈட்டிகள் வழங்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, வீரர் தரங்கவின் பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சர்வதேச தரத்திலான புதிய ஈட்டிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
"எங்கள் தடகள நட்சத்திரத்திற்கும் அவரது ஒலிம்பிக் கனவுக்கும் எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உறுதுணையாக நிற்கும்" என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





















