பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இலங்கை இளைஞர் - திருகோணமலை சாலையில் நேர்ந்த பயங்கரம்
இலங்கை
பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59 ஆம் கட்டை பகுதியில் நேற்று (02ம் திகதி) மாலை ஏற்பட்ட மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த கோர விபத்தானது நிகழ்ந்து இருப்பதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தை தொடர்ந்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்த இரண்டு இளைஞரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான கூடுதல் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






















