• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக “அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம்” அமைக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுவரும் குறித்த இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (31) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,400 மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருவதாக தெரிவித்த அவர், அவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த இல்லம் மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்படுவதாக கூறினார்.

இந்த இல்லத்தில் 24 அறைகள், ஒவ்வொரு அறைக்கும் தனியான குளியலறைகள், மண்டபம், மருத்துவ அறை, அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும், இங்கிருந்து கடற்கரை மற்றும் மைதானத்தை ரசிக்கக்கூடிய வகையில் கட்டடம் வடிவமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் தற்காலிகமாக தங்கியிருந்து, மருத்துவ மற்றும் உணவு வசதிகளை இலவசமாக பெற்றுக்கொண்டு மீண்டும் சமூகத்துடன் இணைவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த இல்லத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

அனைத்து திணைக்கள அனுமதிகளும் பெறப்பட்டுள்ள நிலையில், டெண்டர் முறையில் ஒப்பந்தக்காரர்கள் தெரிவு செய்யப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த இல்லத்தின் முதல் கட்டப் பணிகளை 500 நாட்களுக்குள் நிறைவு செய்து, 2028 ஆம் ஆண்டு தை மாதத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்வாங்கும் இலக்குடன் செயற்பட்டு வருவதாக சாரங்கபாணி அருள்மொழி மேலும் தெரிவித்தார்.

மக்களின் அன்பு, நிதி உதவி மற்றும் பங்களிப்புடன் உருவாகும் இந்த இல்லப் பணிகளில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
 

Leave a Reply