மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி கைது
இலங்கை
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) முன்னாள் முகாமைத்துவச் சேவை அதிகாரி ஒருவரை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மோட்டார் வாகனமொன்றை சட்டவிரோதமாகப் பதிவு செய்தல் மற்றும் உரிமை மாற்றம் செய்தல் தொடர்பான விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இலங்கை சுங்கத்துறையின் அனுமதியைப் பெறாமலும், உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார் ஒன்றை பதிவு செய்வதற்கு உதவியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கைதேநீர்
ஆணைக்குழுவின் தகவலின்படி, அந்த முன்னாள் அதிகாரி, வாகனத்தின் முதல் உரிமை மாற்றத்திற்குத் தேவையான ‘கவுண்டர்’ (counter) எண்ணை வழங்கியதாகவும், அது தொடர்பான விவரங்களை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





















