• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கை

எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல் விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும்,  போதிய நீருள்ள குளங்களின் கீழான சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர்இ எல் நினோ தாக்கம் குறித்து விரிவான விளக்கமளித்தார். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இதன் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படும் எனவும் ஒவ்வொரு எல் நினோவும் தனக்கே உரித்தான தனித்துவமான தன்மைகளைக் கொண்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்துஇ எதிர்வரும் காலநிலையை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா,

வடக்கு மாகாணத்துக்கான மழைவீழ்ச்சியானது வழமைபோன்று ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தாழமுக்கங்களால் ஏற்படும் எனத் தெரிவித்தார். மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் மழைவீழ்ச்சியின் அளவு அதிகமாக இருக்கும் எனவும்,  டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஒக்டோபர் 12ஆம் திகதிக்குப் பின்னரே வடக்கு மாகாணத்துக்கான மழைவீழ்ச்சி ஆரம்பமாவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ,

மத்திய விவசாய அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நெல் விதைப்பை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன்,  மூன்று அல்லது மூன்றரை மாத கால நெல் இனங்களையே பயிரிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நெல் விதைக்கப்பட்டு 12 நாட்கள் கடந்த பின்னர் கிடைக்கும் மழைவீழ்ச்சியால் பயிர்கள் பாதிக்கப்படுவது குறைவாக இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு,  ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயக் குழுக் கூட்டங்களை நடத்திப் பொருத்தமான நெல் விதைப்புத் திகதிகளைத் தீர்மானிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் த.ராஜகோபு கருத்துத் தெரிவிக்கையில்,  குளங்களில் சிறுபோகப் பயிர்ச்செய்கை நிறைவடைந்த பின்னரும் சராசரியாக 20 சதவீதமான நீர் எஞ்சியுள்ளதாகத் தெரிவித்தார். வன்னேரிக்குளத்தில் மூன்றாம் போகமாகச் சிறுதானியப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார். TranslationTools & Resources

இதனையடுத்து ஆளுநர் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்:

அதிக வெப்பத்தால் குளங்களில் நீரின் ஆவியாதல் வீதம் அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது எஞ்சியுள்ள நீரைப் பயன்படுத்தி மூன்றாம் போகமாகச் சிறுதானியப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க விவசாயிகள் விரும்பினால்,  பொருத்தமான குளங்களில் அதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அனுமதிக்கும்போது கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவை மற்றும் நிலத்தடி நீரைச் செறிவூட்டுதல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும்.

இம்முறை கிடைக்கப்பெறவுள்ள அதிகளவான மழைநீரை உச்ச அளவில் தேக்கி வைப்பதற்கு ஏதுவாக குளங்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட புனரமைப்புச் செயற்பாடுகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களுக்கான மாற்று குடிநீர் விநியோக மூலங்களைக் கண்டறியும் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும்,  இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதேவேளை நீரின் ஆவியாதல் வீதம் அதிகமாகக் காணப்படும் தற்போதைய நிலையில்,  குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைவடைந்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பேராசிரியர் பிரதீபராஜா இதன்போது விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,  அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்,  மேலதிக மாவட்டச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply