தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை
இலங்கை
இலங்கையிலிருந்து தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய, பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைப் பகுதிக்கு நேற்று (24) அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகப் படகு ஒன்றில் இருவர் வந்து இறங்கியதாக மரைன் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் காளிதாஸ் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டு இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் வத்தளை பகுதியைச் சேர்ந்த லூஸிநந்த் (30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார், பேசாலை கடற்கரையிலிருந்து ரூ. 3 லட்சம் பணத்தைக் கொடுத்துப் படகொன்றில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை 4.00 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்து இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள், இலங்கையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதில், இவர்கள் இருவர் மீதும் ‘மெத்தம்பேட்டமைன்’ (Methamphetamine), ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு தீவிரக் குற்ற வழக்குகள் இலங்கையில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், இலங்கையின் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இலங்கையில் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக, தமிழகம் அல்லது கேரள மாநிலத்தில் தலைமறைவாக வாழும் நோக்கிலேயே இவர்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற கோணத்தில் உளவுத்துறையினரும் பொலிஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடவுச்சீட்டு (Passport) இன்றிச் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியதற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களைச் சென்னை புழல் சிறையில் அடைக்க மரைன் பொலிஸார் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், இவர்கள் மீது இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் சுட்டிக்காட்டிய ‘கியூ’ பிரிவு (Q Branch) பொலிஸார், இருவரையும் மீண்டும் இலங்கையிடமே ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, கைதான இருவரையும் முறைப்படி இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.





















