கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் புகழாரம்
கனடா
கொழும்பு கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீட்டை போன்ற உணர்வை தருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கனடிய உயர் ஆணையர் இஸபெல்லா மார்டின் அவர்களை கொழும்பு கனடா இல்லத்தில் சந்தித்த பின் மனோ கணேசன் இதை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் ஜம்மு சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமியும் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இரு தரப்பு தொடர்பு குறித்து மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது;
கனடா தூதுவருடன் நட்பு ரீதியான உரையாடல் நடைபெற்றது.
இது முழுமையாக ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல, தற்போதைய நிலைமைகளையும் எதிர்கால வாய்ப்புகளையும் குறித்து இரு நண்பர்கள் மனம் திறந்து கலந்து உரையாடிய சந்திப்பாக இருந்தது.
சமீபத்தில் கனடாவிற்கு மேற்கொண்ட எனது பயணத்தை பற்றி தூதுவர் கேட்டு அறிந்தார்.
அவருடன் எனது கனடா நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
எனது பயணத்தின் போது, அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர்
ஜுனிடா நாதன், மாநில அவை உறுப்பினர் லோகன் கணபதி உள்ளிட்ட நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும், கனடா தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, மற்றும் டொரன்டோ முஸ்லிம் சங்கம், நண்பர்களை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது. Maps
உதயன் ஊடக நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டேன்.
இலங்கை–கனடா கூட்டு தயாரிப்பாக உருவாகும் “கிளிநொச்சி” என்ற மனோவிஷன் திரைப்படம் குறித்த தகவல்களையும் கனடா தூதுவருடன் பகிர்ந்து கொண்டேன்.
இறுதியாக, மலையக தமிழ் சமூகத்தின் முன் உரிமைகளையும், வாழ்வியல் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்ள மலையகத்திற்கு வருமாறு தூதுவரை அன்புடன் அழைத்தேன்.
தூதுவர் அழைப்பை ஏற்று கொண்டார். என தெரிவித்தார்.





















