• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒப்பந்தத்தை எட்ட டிரம்ப் நெருக்கடி - ஈரான் தலைவர் மொஜ்தபா விமர்சனம்

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விமர்சித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அமெரிக்கா–ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் அரச தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில், ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்கா கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில், அனைத்து வகையான அதிகார நெருக்கடிகளையும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்தினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து எனக்கு வேறுபட்ட கருத்துகள் இருந்தன” என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வழங்கிய உறுதியான உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே ஒப்பந்தத்திற்கு தாம் ஒப்புதல் அளித்ததாகவும் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில், ஈரான் சார்பில் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மின்னணு முறையில் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply