• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்

இலங்கை

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இறக்குமதிகளுக்காக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை முறையாக ஆய்வு செய்வதன் மூலம், தேவையற்ற முறையில் வெளிநாட்டுச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வர்த்தமானியின் முதன்மை நோக்கமாகும்.

சில தரப்பினர் போலி நிறுவனங்களைப் பதிவு செய்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்கு வெளியே அனுப்பியுள்ளமை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இனிவரும் காலங்களில் இறக்குமதியாளர்கள் தங்களின் முகவரி, வங்கி கணக்கு விபரங்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அதற்காக செலுத்தப்படும் பணத்தின் அலகு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முறையாக வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வங்கிப் பரிவர்த்தனைக்கும் ஒரு தனித்துவமான இலக்கத்தை பேண வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் பற்றிய விபரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவுத் திகதி, தற்காலிக விலைப்பட்டியல் எண் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கிகள் மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.

மேலும், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளராகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பதிவு இல்லாத இறக்குமதியாளர்களுக்கு, வர்த்தக வங்கிகள் மூலம் முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் புதிய ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மூலம் இறக்குமதித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply