• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் முன்னெடுப்பு

இலங்கை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தின் மூன்றாம் நாள் நடவடிக்கைகள் இன்று சாய்ந்தமருதில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரை மதஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்காகக் கொண்டு டெங்கு கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனைகளின் போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய அபாயகரமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேங்கியிருந்த நீரும் அகற்றப்பட்டது.

சுற்றுப்புற சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், டெங்கு பரவலுக்கான காரணிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், நோய் பரவலைத் தடுக்கும் நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயின் ஆரம்ப அறிகுறிகள், பரவும் விதம் மற்றும் தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வீடுகள், தொழில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சுகாதார அதிகாரிகள், வாரந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை பரிசோதித்து அகற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

“டெங்கு ஒழிப்பு என்பது சுகாதாரத் துறையின் மட்டும் பொறுப்பல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பாகும்” என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்ததுடன், “சுத்தமான சூழல் – டெங்கு இல்லா சமூகம்” என்ற இலக்கை அடைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் செயற்பாட்டு பங்களிப்பும் அவசியம் எனவும் குறிப்பிட்டனர்.
 

Leave a Reply