• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி

இலங்கை

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இன்று (17) ஊடகங்களுக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்து, உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சுரேஷ் சலேயின் தரப்பினர் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த உண்மை வெளிவந்துள்ளதாக மனோரி சலே குறிப்பிட்டுள்ளார்.

“நேற்று எங்கள் இரு தரப்பையும் அழைத்துச் சிஐடியினர் பேசினார்கள். இவ்வளவு காலமாகத் தாங்கள் செய்யவில்லை என மறுத்து வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், நேற்று முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்டார்கள். நாங்கள் கூறியது போலவே, சுரேஷைச் சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, எல்லோர் முன்னிலையிலும் ஆடையின்றி நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என அவர் தெரிவித்தார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகச் சுரேஷ் சலே சிறைக்குள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதாக அவரது மனைவி கவலை வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் சலே தொடர்ந்து உணவு உட்கொள்வதையோ அல்லது தண்ணீர் குடிப்பதையோ தவிர்த்து வருகிறார்.

இதனால் அவரால் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாமல் போயுள்ளதுடன், பேசுவதற்கும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்.

அவரது கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் காரணமாகக் கைகள் அனைத்தும் வீங்கியிருந்ததால், தற்போது அவை அகற்றப்பட்டுள்ளன.

எப்படியாவது அவரது உயிரைத் தக்கவைக்கும் நோக்கில், வைத்தியர்கள் தற்போது சிறு சிறு துளிகளாகத் திரவ ஆகாரங்களை வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவருக்குச் சிறைக்குள் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவத்தைச் சிஐடியினர் ஒப்புக்கொண்டுள்ளமை மற்றும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ள விவகாரம் கொழும்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 

Leave a Reply