இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்
இலங்கை
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச மக்களான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
யுத்தம் நிறைவடைந்து 17ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் அப்பகுதி மக்கள் இதுவரை மீள் குடியேற முடியாத நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
பெரும்பாலான காணிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகவும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாகவும் கையகப்படுத்தப்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது
வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு நிர்க்கதியாகியுள்ள பலர் காணி உரிமையினை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர்
அத்துடன் அரசியல்வாதிகள் , சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை போராட்டம் முன்னெடுக்கப்பட்ட யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதேவேளை, காணி விடுவிப்பு கோரி பலாலியிலும் மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.






















