திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு
இலங்கை
திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (09) மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி. எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் உலக வங்கி நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கும் இத்திட்டத்திற்காக கட்டட வசதிகள் மற்றும் அலுவலக உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 60 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தைத் தவிர, பதுளை, காலி, கிளிநொச்சி மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இதேபோன்ற ஐந்து கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகக் கட்டடத் தொகுதியின் மற்றொரு பகுதியில் அமைக்கப்படவுள்ள இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் மூலம் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ சேவைகளை மேலும் விரிவாகவும் திறம்படவும் முன்னெடுக்க முடியும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாசன் சுகுணதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் றியாத், மாவட்ட கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.





















