150 வருடங்களின் பின் கியூபாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அலறியடித்து ஓட்டம்
150 வருடங்களின் பின் கியூபாவின் வடமேற்கு கடற்கரைப் பகுதிக்கு அப்பால் திங்கட்கிழமை (08) சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் , மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பல பகுதிகளையும் உலுக்கியுள்ளதாக சர்வதேச புவிச்சரிதவியல் மையங்கள் தெரிவித்துள்ளன.
இப்பிராந்தியத்தில் கடந்த 150 வருட வரலாற்றில் நவீன கருவிகள் மூலம் பதிவான மிக வலுவான மற்றும் அரிய நிலநடுக்கம் இதுவென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட் ஆகப் பதிவாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து வெறும் 26 கிலோமீட்டர் (16 மைல்) என்ற ஆழமற்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி கியூபாவின் மண்டுவா நகருக்கு மேற்கு-வடமேற்கே 104 கிலோமீற்றர் தொலைவிலும், தலைநகர் ஹவானாவிலிருந்து கார் மூலம் பயணிக்கும் 2 முதல் 4 மணித்தியால தூரத்திலும் அமைந்துள்ளது.
இது குறித்துப் அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையத்தின் புவியியல் ஆய்வு நிபுணர் பால் ஏர்ல் , இந்த நிலநடுக்கமானது டெக்டோனிக் தட்டின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மிகவும் அசாதாரணமானது.
பொதுவாக தட்டுகளின் எல்லைகளிலேயே நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். கடந்த 1880 ஆம் ஆண்டிற்குப் பின்னர் (அதாவது 146 வருடங்களாக) இந்த நிலநடுக்க மையத்திலிருந்து 322 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் இவ்வளவு வலுவானதொரு நிலநடுக்கம் பதிவானதே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கியூபாவின் மேற்குப் பகுதியான பினார் டெல் ரியோ உள்ளிட்ட பல நகரங்களில் சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாகக் கட்டிடங்கள் பலமாக உலுக்கப்பட்டுள்ளன.
பல தசாப்தங்களாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாகக் கியூபாவின் பெரும்பாலான கட்டிடங்கள் ஏற்கனவே பலவீனமடைந்து, பராமரிப்பற்ற நிலையில் உள்ளதால் மக்கள் பேரச்சமடைந்து வீதிகளை நோக்கி அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கியூபாவைத் தாண்டி அண்டை நாடுகளையும் உலுக்கியுள்ளமை மக்களை பீதியில் தள்ளையுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமி, போர்ட் லாடர்டேல் மற்றும் ஒர்லாண்டோ வரை இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
மியாமியிலுள்ள 28 மாடிகளைக் கொண்ட பிரதான அரச நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட பல உயரமான கட்டிடங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டதுடன், அங்குள்ள அதிவேக மின்சார ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
மெக்சிகோவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான கான்கூன், பிளாயா டெல் கார்மென் மற்றும் துலூம் ஆகிய பகுதிகளில் உள்ளூர் நுகர்வோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிலநடுக்க அதிர்வைக் கண்டு தப்பியோடியுள்ளனர்.
அங்கு அவசரப் பாதுகாப்பு நெறிமுறைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தினால் பாரிய உயிர்ச்சேதங்களோ அல்லது பெரியளவிலான கட்டமைப்புச் சேதங்களோ இதுவரை பதிவாகவில்லை என அந்தந்த நாட்டுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கத் தேசிய வானிலை சேவை மையத்தினால் எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பதுடன், நுகர்வோர் மற்றும் கரையோரப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.























