கோலிவுட்டின் பிஸியான நாயகன் - அடுத்தடுத்து குவியும் விஜய் சேதுபதியின் பிரம்மாண்ட படங்கள்
சினிமா
தமிழ் திரையுலகில் தற்போதைய நிலவரப்படி மிக பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. அவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் மற்றும் படப்பிடிப்பில் இருக்கும் திரைப்படங்களின் தற்போதைய முழு விவரங்கள் இதோ:
தேசிய விருது பெற்ற சூப்பர் டெலக்ஸ் படத்திற்குப் பிறகு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணையும் திரைப்படம் பாக்கெட் நாவல். இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு ஜூன் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு முடிந்த அடுத்த நாளே, அதாவது ஜூன் 18 முதல் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்ள உள்ளார்.
இதனைதொடர்ந்து, வெற்றிமாறன் கதையில் உருவாகும் அரசன் படத்தின் எஞ்சிய பணிகளை முடித்துக் கொண்டே, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்குநர் மணிரத்னத்தின் புதிய திரைப்படத்திலும் விஜய் சேதுபதி இணையவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே நடித்து முடித்த பல முக்கிய திரைப்படங்கள் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் ரிலீஸ் வேலைகளில் பிஸியாக உள்ளன.
இதுதவிர, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. முன்னணி தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தபு நடித்துள்ள ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் மாத இறுதியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்தின் பணிகளும் நிறைவடைந்துள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 ஆகிய திரைப்படங்களில் விஜய் சேதுபதி மிக முக்கிய கேமியோ ரோல்களில் நடித்து முடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இயக்குநர் பாண்டிராஜ் உடன் முதன்முறையாக இணையவிருக்கும் புதிய கமர்ஷியல் திரைப்படம் மற்றும் இந்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபார்சி சீசன் 2 வெப் சீரிஸ் ஆகிய மாஸான ப்ராஜெக்டுகளும் விஜய் சேதுபதியின் லைன்-அப்பில் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்கு மக்கள் செல்வனின் திரைப்பட வேட்டை திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் தொடரப் போவது உறுதி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















