ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டது - அமெரிக்க தரப்பிலிருந்து சர்ச்சை கருத்து
ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அமெரிக்கா இதில் வெற்றியை நிலைநாட்டிவிட்டதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அந்நாட்டு நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழு முன் பேசிய ரூபியோ, "ஈரானின் ராணுவத்தை ஒடுக்குவதற்காக அந்நாட்டுப் பகுதிக்குள் நாங்கள் நடத்தி வந்த தொடர் தாக்குதல்களை இப்போது நிறுத்திவிட்டோம்.
ஏனெனில், 'எபிக் பியூரி' நடவடிக்கை முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா தனது இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றுள்ளது." என்று கூறினார்.
ஈரானின் அணு ஆயுத தாறுப்பு கட்டமைப்புகளை அழிப்பது, அவர்களின் ஏவுகணை ஏவுதளங்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைப்பது மற்றும் டிரோன் சேமிப்புகளை அழிப்பது ஆகியவையே தங்களின் இலக்கு என்று ரூபியோ விளக்கினார்.
இந்த இலக்குகளை எட்டியதுடன், ஈரானின் எஞ்சியிருந்த விமானப்படை மற்றும் ஒட்டுமொத்த கடற்படையையும் அமெரிக்கா முற்றிலும் அழித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மார்கோ ரூபியோவின் இந்த வாதத்திற்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
போர் இன்னும் ஓயவில்லை என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் முன்வைத்தனர்.
கலிபோர்னியாவின் பிரதிநிதி சாரா ஜேக்கப்ஸ், ரூபியோவை நோக்கி, "நீங்கள் ராணுவ நடவடிக்கையின் பெயரை மாற்றலாம். ஆனால், அதனால் ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிடப் போவதில்லை.
நமது நாட்டு ராணுவ வீரர்கள் இன்னும் ஆபத்தான சூழலில் தான் எல்லையில் உள்ளனர் என்ற உண்மையை மாற்ற முடியாது" என்று சாடினார். முன்னதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் போரை முடிவுக்கு கொண்டவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. அப்படியே ஒப்புதல் கிடைத்தாலும் அதை டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை செயலிழக்க செய்வார் என்று கூறப்படுகிறது.























