அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு
இலங்கை
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (11) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்ஹ, மேலதிக நடவடிக்கைகள் குறித்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் தாம் திட்டமிட்டபடி இன்று காலை 8.00 மணியுடன் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவடைகின்றது எனவும் அதன்படி, காலை 8.00 மணிக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் எனவும் இருப்பினும், எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தற்போது இப்பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது எனவும் தெரிவித்தார்.























