• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டுநாயக்கவில் 39 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல் - சீன நாட்டுப் பயணி கைது

இலங்கை

சட்டவிரோதமாக இலங்கைக்குள் சிகரெட்டுகளைக் கடத்தி வந்த சீன நாட்டு வியாபாரி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இன்று (11) அதிகாலை 12.50 மணியளவில் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 35 வயதுடைய சீன நாட்டு வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனையின் போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டது.

சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளையும் (Suitcases) சோதனையிட்டபோது, அவற்றுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26,100 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் கண்டறியப்பட்டன.

இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி 39 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்க சட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட அனைத்து சிகரெட்டுகளும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சீன நாட்டுப் பயணிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான கடத்தல் நடவடிக்கைகளைக் கண்டறியச் சுங்க அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

Leave a Reply