ஆயிரத்தொரு பாடல்கள் தொகுப்புப்பணி தொடர்கிறது
சினிமா
ஆயிரத்தொரு பாடல்கள்
தொகுப்புப்பணி தொடர்கிறது
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த
லிங்கா படத்தில்
ஓர் அணையைக் கட்டியெழுப்பும்
பாடலொன்று இடம்பெற்றுள்ளது;
அதுதான் ‘இந்தியனே வா’
ஆனால், அந்தச் சூழலுக்கு
நான் முதலில்
எழுதிய பாடலோ வேறு;
அதை உங்கள்
கண்களுக்குத் தருகிறேன்
இப்படி
மகுடம் சேராத
மாணிக்கங்களும்
பதிக்கப்படாத பவளங்களும்
ஆயிரத்தொரு பாடல்கள் நூலின்
1200 பக்கங்களில் அடக்கம்
பல்லவி
எத்தனை பெரியது கடல் - அது
துளியில்தானே தொடங்கியது
எத்தனை பெரியது மலை - சிறு
துகளில்தானே தொடங்கியது
மனங்கள் சேர்ந்து கடலாவோம்
மனிதர்கள் கூடி மலையாவோம்
சரணம் 1
இந்திய நதிகளை இணை
இரண்டு கரமே துணை
மானுட தாகம் தீரவேண்டுமா
மாநிலம்தோறும் அணை
திறமை உண்டு திகைக்காதே
மலையைக் கண்டு மலைக்காதே
அடிவாரத்தில் நிமிர்ந்து பார்த்தால்
மனிதன் மலையின் காலடியில்
சிகரம் ஏறிக் குனிந்து பார்த்தால்
மலையோ மனிதன் காலடியில்
தூங்கும் மக்களைத்
தட்டியெழுப்பு
துணிந்து அணையைக்
கட்டியெழுப்பு
2
வீறு நடை நூறுபடை
வீறுபட எழுக
காடுகளும் மேடுகளும்
கூறுபட வருக
ஆறுகளும் மாறுபட
வேர்வை மழை பொழிக
ஆனவரை வானம்வரை
அணைஉயரம் எழுக
3
சிறகுள்ள பறவைக்குச்
சின்னதடா வானம்
வெறியுள்ள மனிதர்க்கு
வெற்றிதரும் ஞானம்
செத்துவிழும் மீனெல்லாம்
ஆற்றோடு போகும்
உயிருள்ள மீன்தானே
எதிர்நீச்சல் போடும்
நதியை நிறுத்து
விதியைத் திருத்து
அறிவைக் கொடுத்து
அணையை உயர்த்து
#ஆயிரத்தொரு_பாடல்கள்
வைரமுத்து.























